பிரமுகர்கள் பயணிக்கும் வாகனங்களைச் சிதறடிக்கும் அதிசக்திவாய்ந்த குண்டு மீட்பு!

245 0

பிரமுகர்கள் பயணிக்கும் வாகனங்களைச் சிதறடிக்கும் அதிசக்திவாய்ந்த குண்டொன்று, வவுனியா உக்குலான் குளம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

‘கப்டன் பவான் (ஐயா) 99’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, 15 கிலோ 150 கிராம் நிறையுடைய இந்தக் குண்டு, அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று, வவுனியா காவல் துறையினர் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணொருவர், தன்னுடைய வீட்டு முற்றத்தில், குழியொன்றைத் தோண்டிய போதே, சந்தேகத்துக்கிடமான பொருளொன்று தென்பட்டுள்ளது. அந்த பொருள் தொடர்பில், காவல் துறைக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், குண்டு செயலிழக்கும் பிரிவினர் வருகைதந்து அக்குண்டை மீட்டு செயலிழக்க செய்துள்ளனர்.

இந்தக் குண்டானது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் யுத்தகாலத்தில், அதி முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை இலக்குவைத்துத் தாக்கியழிப்பதற்காகவே இம்மாதிரியான குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் வவுனியா காவல் துறையினர் தெரிவித்தனர்.