முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நாளை காசியில் வழிபாடு!

384 0

கடந்த-2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் உயிர்நீத்த அனைத்து உறவுகளினதும் முத்திப் பேறு வேண்டி ஆத்மசாந்தி வழிபாடு நாளை வியாழக்கிழமை(18) இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் இந்தியா பயணமாகியுள்ளார்.

நாளை வியாழக்கிழமை காலை-10 மணியளவில் மேற்படி இரு இடங்களிலும் இந்த ஆத்மசாந்தி வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் இந்திய இலங்கை நட்புறவுக் கழகத் தலைவரும், ஈழத்து உணர்ச்சிக் கவிஞருமான காசி ஆனந்தன்,

சிவத்திரு கபிலனார் அடிகளாருடன் இலங்கையைச் சேர்ந்த தமிழ்மக்களும், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவத்திரு. அர்ச்சுனர் சம்பத்து, கட்சிச் செயலாளர் இராம இரவிக்குமார் ஆகியோர் தலைமையில் அடியார்களும் சிவத் தொண்டர்களும் கலந்து கொள்வர் என இலங்கை சிவசேனைத் தலைவர் தெரிவித்தார்.

இவர்களுட் சிலர் காசி கங்கைக் கரையிலும் மற்றும் சிலர் மயிலாப்பூர் கபாலீச்சரர் திருக்கோயில் குளத்திலும் நீத்தார் வழிபாடுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.