அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும்- அமைச்சர் தகவல்

115 0

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது- தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் மக்களை தேடிமருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் படுத்தப்படும். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின்பெயர், வயது, தொழில் மருத்துவ குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே நேரில் சென்று சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில் சில குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தொலை தூரங்களில் உள்ள கிராமப் பகுதிகள், மலைப் பகுதிகள், மிகவும் பின் தங்கிய பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தியதால் சென்னையில் இந்த திட்டம் சற்று தாமதமாக தொடங்கப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5.98 கோடி பெரியவர்கள் உள்ளனர்.

அவர்களில் 4.48 கோடி பேர் கடந்த ஒரு ஆண்டில் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 33 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம், 23.1 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 16.8 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இரண்டும் இருக்கிறது.

சென்னையில் இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 1.9 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும் 1.5 பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 லட்சம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.