இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர்

336 0

court-hammer_35யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நான்காவது சந்தேகநபர் தாமாகவே முன்வந்து மன்றில் ஆஜராகியுள்ளார்.

இதனையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருட்டுச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 8 பொலிஸாருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.