மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது-துமிந்த

199 0

19ஆவது அரசியலமைப்பின்  பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல  சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு கூட 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்த அமைச்சர் துமிந்த திசாநாயக்க  கூட்டு எதிர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர் செய்வதற்கு பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

மகாவலி அபிவிருத்தி நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொது எதிரணிக்குள் தற்போது  ஏற்பட்டுள்ள பிளவினை சீர் செய்யவே  மஹிந்த ராஜபக்ஷ  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு முரணாக  சட்டவியாக்கியானம் கோருகின்றார். எவ்வாறு இருப்பினும்  சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த உருவாக்கிய 19ஆவது திருத்தத்திற்கு மஹிந்த கட்டுப்பட வேண்டும். இவர் மாத்திரம் விதிவிலக்கல்ல.

2020ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியினர் தற்போதே தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டனர்.   கோதாபாய ராஜபகஷ,  பசில் ராஜபக்ஷ,  சாமல் ராஜபக்ஷ  போன்றோரை ஜனாதபதி வேட்பாளர்களாக களமிறக்குவதாக  கூட்டு எதிரணிக்குள்  பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றது.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவரிடம் நாட்டை பொறுப்பாக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம கோதபாயவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுபுறம் சாமல் ராஜபக்ஷவிற்கு  வாசுதேவநானயகார ஆதரவு வழங்குவதாக காணப்படுகின்றதை தொடர்ந்து கட்சிக்குள்  காணப்படுகின்ற கருத்து வேறுப்பாடுகள்  வெளிப்பட்டு விட்டது.  பொது எதிரயினின் பிரதான நோக்கம் அரசாங்கத்தை வீழ்த்தி மீண்டும் குடும்ப ஆட்வியினை  உருவாக்குவது ஆகும்.

மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்களை தவிர கட்சியின் பிறிதொரு  உறுப்பினர்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதியற்றவர்களா? அல்லது மஹிந்த  பிறிதொருவரை களமறக்க தயாரில்லையா? குடும்ப ஆட்சியினை தோற்றுவித்துதான் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில்  பொது எதிரணியினர் காணப்படுவது அவர்களது  இயலாமையினை வெளிப்படுத்துகின்றது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் பதவி மோகத்தின் காரணமாக  மஹிந்த ஆட்சியை பெற பாரிய முயற்சிகளை மேற்கொண்டார். இரண்டு முறை  ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னரும் 2015ஆம்  ஆண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்.

பின்னர் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலிலும் படு தோல்வியடைந்து பாராளுமன்ற  உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார். தற்போது  19ஆவது அரசியலமைப்பினை மீறி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடாதா என்ற நப்பாசையில்  சட்ட வியாக்கியானம் கோருகின்றார்.

19ஆவது அரசியலமைப்பு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க, தற்போதைய  ஜனாதபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்புடையதாகவே காணப்படுகின்றது. மஹிந்த மாத்திரம் நாட்டுக்கு விதிவிலக்கல்ல மஹிந்தவும் கடந்த  காலங்களில்  மீண்டும்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்  இருக்கவில்லை.  அவர் குடும்ப ஆட்சியை உருவாக்குவதிலே தீவிரமாக காணப்பட்டார்.

தன் கட்சியில் வேட்பாளர் தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையில்  ஏற்பட்ட கருத்து முரண்பாடு கட்சியை பலவீனப்படுத்துமோ  என்ற அச்சத்திலே அவர்  ஜனாதிபதியாக போட்டியிடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எவ்வாறு  இருப்பினும் மஹிந்தவால் இனி ஒரு போதும்  ஜனாதிபதியாக போட்டியிட முடியாது” என்றார்.

Leave a comment