முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாவிலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அதன்படி இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அக்காணிப்பகுதியை விடுவிப்பதற்காக வேண்டி அவ்விடத்தில் காணப்படுகின்ற இராணு முகாமை பிறிதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

