இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டப்படி இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
குறித்தசங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி திருகோணமலை எண்ணெய் களஞ்சியங்களை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
எனினும் 25ஆம் திகதி நள்ளிரவு எரிபொருள் விநியோகப் பணிகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டதுடன், மறுநாள் இராணுவத்தைக் கொண்டு எரிபொருள் விநியோகப் பணிகள் இடம்பெற்றன.
இதனை அடுத்து பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 16 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எண்ணெய்ப் பணியாளர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிமாக கைவிடவும், இன்றையதினம் மீண்டும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இணங்கி இருந்தனர்.
இதன்படியே இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.