சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (3). உலகம் முழுவதும் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UN General Assembly) சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை அறிவித்தது. இது UNESCOவின் பரிந்துரையின் பேரிலேயே நடை பெற்றது. இந்த தினம், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் மட்டும் அல்லாமல், தொழில்முறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்வது போன்ற ஆபத்துகள், துன்புறுத்தல்கள், கொலைகள் போன்றவை குறித்தும் உலகின் கவனத்தை ஈர்க்கிறது.
கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது.
பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து கூறும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக காணப்படுகின்ற போதிலும் இந்த தூண் ஆட்சியில் உள்ளவர்களால் பல தடவை அழிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏராளமான பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.
சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் இனங்காணப்பட்ட போதிலும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை அனுபவிக்கின்றனர்.
ஊடக ஆசிரியர்களிற்கு எதிராக குற்றவியல் அவதூறு சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டனர்.
ஊடக துறை என்பது ஆபத்துடன் போராடுகின்ற விடயம்.
இலங்கையில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் அதிகமானோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும். 2004ஆம் முதல் 2009ஆம் வரை தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர்.
2004ஆம் ஆண்டு முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களின் பட்டியல் இதோ.
இந்த பட்டியலில் ஐயாதுரை நடேசன், கந்தசுவாமி பாலானந்தராஜா, லங்கா ஜயசுந்தர, தர்மரட்னம் சிவராம், கன்னமுத்து அரசகுமார், செல்வரட்னம், ஃபலீல், நவரட்னம், சுகர்தராஜன், கனநாதன் ஜோர்ஜ் சகாயதாஸ், கிருஷ்ணபிள்ளை, ரஞ்சித் குமார், லக்மால் டி சில்வா, மனோஜ், மனோஜன்ராஜ், விஸ்வநாதன், பாஜ்கரன், சிவமகராஜா, இராமசந்தின், ரவீந்திரன், சந்திரபோஸ் சுதாகர், நிமலராஜா, சுபாஜினி, லிம்பியோ, தர்மலிங்கம், தேவகுமார், லசந்த விக்ரமதுங்க, புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி .
ஜனவரி மாதம் என்பது இலங்கையில் ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட இந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இலங்கையில் வருடம் தோறும் ஜனவரி மாதத்தை கருப்பு ஜனவரியாக கடைப்பிடிக்கும் இலங்கையின் ஊடகவியலாளர்கள், இந்த கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி வருகின்றனர்.
1980- 2010 வரை தமது எழுத்திற்காக அழுத்தங்களை எதிர்கொண்டு புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களும் ஜனநாயகத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கின்றவர்களே.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரி இலகு காத்த கிளியாக இலங்கை ஊடகவியலாளர்கள் பயணிக்கின்றனர்.