ஹம்பந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னர் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் நேற்று பிற்பகல் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட உடன்படிக்கைக்கும், கைச்சாத்திடப்பட உள்ள உடன்படிக்கையின் உள்ளடக்கங்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தினமொன்றை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.