கைதிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை

19545 0

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, அரச எயிட்ஸ் நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர். சிசிர லியனகே கூறியுள்ளார்.

கைதிகள் மத்தியில் எய்ட்ஸ் நோய் கூடுதலாக பரவும் வாய்ப்பு காணப்படுவதாக கூறிய டாக்டர் லியனகே, இதன்படி முதல் கட்டமாக கைதிகளை இரத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எயிட்ஸ் நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது ஒரு பாரிய அதிகரிப்பு என்று கூறிய அந்த பணியகம், கடந்த ஆண்டு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 273 பேர் அடையாளம் காணப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனவே, இவ் வருட இறுதிக்குள் 11 இலட்சம் பேருக்கு எய்ட்ஸிற்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறிய சிசிர லியனகே, கடந்த ஆண்டு பத்து இலட்சம் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a comment