மூன்று நாடுகளிலிருந்து அவசரமாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

268 0

உள்ளூர் சந்தைகளில் அரியை நிலையாகவும். தட்டுப்பாடின்றி வைத்திருப்பதற்கும் மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், நாட்டரிசி, சம்பா அரிசி ஆகியவற்றை உடனடியாக இறக்குமதிசெய்ய முடிவெடுத்துள்ளோம்.

இது தொடர்பாக தாய்லாந்து தூதுவர் திருமதி. சூழாமணிசாட்ஷ்சுவன், இந்தோனேசிய தூதுவர் குஷ்டிகுராஅர்டியாசே, பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சர்பிராஸ் அகமட்கான் சிப்றா ஆகிய வெளிநாட்டுத்தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் உங்கள் நாடுகளின் அரசாங்கத்துக்குமிடையே திறந்தமட்ட உடனடிபேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, விரைவான அரிசி கொள்வனவை மேற்கொண்டு உள்நாட்டில் அரிசிச்சந்தையை திடமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு இந்தவார அமைச்சரவைக் கூட்டத்தின்போது அறிவுறுத்தினார். அதற்கிணங்கவே நான் உங்களை உடனடியாக இங்கு வரவழைத்துள்ளேன்’ என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தூதுவர்களிடம் தெரிவித்தார்.

‘உங்களது நாடுகளுக்கும் எமக்குமிடையில் வளர்ந்துவரும் நட்புரீதியிலான உறவில் திருப்தியும் மகிழ்ச்சியும் இருப்பதாக நாம் உணருகிறோம். இந்த உறவு பல்லாண்டுகாலம் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே எமது நாட்டின் கோரிக்கை வித்தியாசமாக அமைகின்றது. அரசுக்கும் அரசுக்குமிடையிலான நேரடி பொறிமுறையுடன் இணைந்தவாறு எங்கள்நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு நாட்டம் காட்டுகின்றது.

எனவே, தேவைப்பட்டால் தனியார் பிரிவுகளையும் திறந்துவிடுவதன் மூலம் எங்களுக்கு மேலும் நீங்கள் உதவி செய்யலாம். எனது அமைச்சின் கீழிருக்கும் கூட்டுறவு முகவர்நிலையம் இந்த இறக்குமதி செயற்பாட்டின் முக்கிய வகிபாகத்தை மேற்கொள்கின்றது. அத்துடன் இந்த செயற்பாட்டுடன் அந்த நிறுவனம் இடையறாதொடர்பில் இருக்கும்’

உங்கள் நாட்டின் இறக்குமதிக்கான அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் வெளிப்படைத்தன்மையான சர்வதேச கொள்வனவு செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு எனது அமைச்சின் அதிகாரிகள், உணவு தொழில்நுட்பவியலாளர்கள், அரிசி தொடர்பில் தேர்ச்சிபெற்றவர்கள் உள்ளடங்கிய நிபுணர்குழு ஒன்று உங்களது நாட்டுக்கு வருகைதந்து பரிசோதனை மற்றும் களஞ்சியச்சாலையில் உள்ள அரிசியின் தரநிர்ணயம் தொடர்பான சான்றிதழை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும். அதன் பின்னர் உங்களிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்வோம்.

இந்த வேளையிலே நாட்டரிசி, மற்றும் சம்பா வகைகளையே நாம் இறக்குமதி செய்ய எண்ணுகின்றோம். 300 மெட்றிக்தொன் அரிசியையே நாங்கள் ஆரம்பத்தில் கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமன்றி, இருதரப்பு வர்த்தகத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்துவதற்கும் நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்’ என்றார்.

Leave a comment