ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு அன்பளிப்புச் செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கல்வி அமைச்சரும், ஐ.தே.க. வின் துணை பொதுச் செயலாளருமான அகில விராஜ் காரியவசம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்துக்கு அமைய கட்சியின் அனைத்து மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
அவ்வாறு சேகரிக்கப்படும் பணத்தைக் கொண்டு அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேச மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.