இலங்கையில் வெள்ள மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் 15 மாவட்டங்களில் பெய்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 122 இற்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.
இதுவரை வெளியான தகவல்களின் படி ஆறு லட்சம் மக்கள் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை முப்படையினரும் களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலதிகமாக இந்திய அரசாங்கம் உடனடியாக நிவாரணக் கப்பலை அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கப்பலில் வந்த இந்தியக் கடற்படையின் மீட்புக் குழுக்கள், மிதவைப் படகுகளுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இலங்கை சென்றுள்ள மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


