நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்ப டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதற்கான எதிர்ப்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில் நாளை திங்கட் கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்து தீர்மானிக்கப்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது குறிப்பிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கும் புதிய அமைச்சர்கள் சிலரை நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த ஆகியோர் புதிய அமைச்சு பதவிகளுக்காக உள்வாங்கப்பட உள்ளனர்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது வகிக்கும் அமைச்சு பதவிகளை சுதந்திர கட்சிக்கு வழங்குவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதனால் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன.
எவ்வாறாயினும் கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் பதவியேற்ற கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல் முறையாக மறுசீரமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.