உறங்கும் பெண்களிடம் நூதன திருட்டு மலையகத்தில் தொடரும் கொள்ளை (காணொளி)

238 0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி மற்றும் பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் மர்மமான முறையில் வீடுகளுக்குள் நுழைந்து, நித்திரையில் ஆழ்ந்திருந்த பெண்களிடம் தங்க சங்கிலிகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மர்மமான முறையில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தாம் கொண்டு வந்த டோச் லைட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும் இதனையடுத்து சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையக பிரதேசங்களில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆலயங்கள், வீடுகள் என பல்வேறுப்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

இத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பத்தனை கிறேக்கிலி தோட்டத்திலும் மற்றும் பொரஸ்கிறிக் தோட்டத்திலும் திருட்டுச் சம்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

கிறேக்கிலி தோட்டத்தில் எள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவரின் தங்க சங்கலியை அபகரித்தபோது அப்பெண் கூச்சலிட்டதால் தப்பியோடும் நிலையில் சங்கிலியின் பாதி துண்டை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் மலையகத்தில் தொடராமல் இருப்பதற்கு  அவர்கள் விட்டுச் சென்ற அடையாள பொருளின் கைரேகைகளை பதிந்து கைது நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.