கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது.
தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர்.
2009ம் ஆண்டின் பின்னர் தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதேவேளை, கிளிநொச்சி – பன்னங்கண்டி – சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ந்தும் 43ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
தங்களது காணிகளுக்கான உரித்தாவணங்களை வழங்குமாறும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரி அவர்களின் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களின் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி கந்தசுவாவாமி ஆலயத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 73ஆம் நாளாகவும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் இதுவரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அரசாங்க பிரதிநிதிகள் யாரும் சந்திக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.