சிறிகொத்த துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் விளக்கமறியலில்

205 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிலான இவர் மிரிஹான பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இதன்படி, சந்தேகநபர் இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தில் இருந்த யானைச் சின்னத்தின் மீது, அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், இது திட்டமிட்டு செய்யப்பட்ட காரியமா அல்லது கவனயீனமாக துப்பாக்கி வெடித்ததா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.