மதகுரு குலன் எதிர்ப்பு நடவடிக்கை: துருக்கியில் 1000 பேர் கைது

238 0

துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு காரணமானவராக கருதப்படும் மதகுரு குலனுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கையில் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என குற்றம் சாட்டும் துருக்கி, அவரை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இதனையடுத்து, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இந்நிலையில், துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு காரணமானவராக கருதப்படும் மதகுரு குலனுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கையில் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் தய்யிப் எர்டோகனுக்கு அதிக அதிகாரம் வழங்குவது தொடர்பான பொதுவாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

81 மாகாணங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,013 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.