தகுதி, திறமை அடிப்படையில் கட்சிப் பதவிகளை வழங்குங்கள்-ரணில்

221 0

தமக்காகவோ, சஜித்துக்காகவோ உழைத்தவர்கள் என்று பேதப்படுத்திக் கொள்ளாமல் திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் அமைப்பாளர் நியமனத்துக்குப் பொறுப்பான சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்சியை பலப்படுத்தி, கட்சி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் கிடைக்க வேண்டி சகல வசதிகளையும் செய்துகொடுத்து எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பிரதமர் அச்சபையிடம் கூறியுள்ளார்.

இதன்படி, ஐ.தே.க.யில் தேசிய ரீதியில் 116 தொகுதி அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அடுத்துவரும் நாட்களில் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், எதிர்வரும் மே தினத்துக்கு முன்னர் சகல தொகுதி அமைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.