ஈராக் நாட்டில் 15 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை

212 0

ஈராக்கின் மேற்கு மொசூல் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் உள்ளூர் மக்கள் 15 பேரை பிடித்துச்சென்று சுட்டுக்கொன்றனர்.

ஈராக்கின் முக்கிய நகரமான மொசூல் நகரின் கிழக்கு பகுதியை மீட்டு விட்ட நிலையில், மேற்கு பகுதியையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து உள்நாட்டுப்படையினர் உக்கிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டைக்கு பயந்து அங்கிருந்து மக்கள் தப்பிக்க முயன்றால், அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து கொன்று விடுகிறார்கள்.

ஈராக் படையினருடனான சண்டையில் பொதுமக்களை மனித கேடயங்களாக அவர்கள் அவ்வப்போது பயன்படுத்தி வருவதே இதற்கு காரணம்.இந்த நிலையில், மேற்கு மொசூல் பகுதியில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துப்பாக்கிச்சூடு வல்லுனர்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்காமலும், தங்கள் வீடுகளின் உச்சியில் ராக்கெட் லாஞ்சர்களை அமைக்க விடாமலும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் 15 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்துச்சென்று சுட்டுக்கொன்று விட்டனர்.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் 4 துப்பாக்கி சுடும் வீரர்கள் அல் ரெபெய், ஜாஞ்சிலி, அல் சிஹ்ஹா நகர்களில் அமர்த்தப்பட்டுள்ளதாக ஈராக் படைத்தளபதியான குசாய் அல் கனானி கூறியதாக அல் அரேபியா ஊடகம் கூறி உள்ளது.