மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்?(காணொளி)

281 0

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேற்று பிரிவு, பல் வைத்தியப் பிரிவு என்பன உள்ளன.

இங்கு நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுமா என நோயர்கள் மற்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

8 மணித்தியால வேலைப்படி 6 வார்ட்டுகளுக்கு 18 தாதியரும் வெளிநோயாளர் பிரிவுக்கு இருவரும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இருவரும், பல் வைத்திய பிரிவுக்கு ஒருவரும் மகப்பேற்று பிரிவுக்கு ஒருவருமாக 24 பேர் தேவைப்படும் நிலையில், தற்போது மூவர் மட்டுமே கடமைகளில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்கம், கிரிவன் எலிய, குடா மஸ்கெலியா இவ்வாறான பகுதிகளில் சுமார், 3 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தரும் நிலையில், இவ்வைத்தியசாலையில், ஆளனிப் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கி பழுதடைந்த நிலையிலுள்ளதால் கீழ் மாடியிலிருந்து மேல் மாடிக்கு நோயாளர்களைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுவதால், இவற்றை நிவர்த்தி செய்யுமாறு நோயளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.