கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

265 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி பிறப்பித்தார்.

இக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம்.கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் அதேநாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விடுமுறை காரணமாக இன்றைய அமர்வு நீதிபதியின் பிரத்தியேக அறையில் நடைபெற்றது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.