ஐ.தே.கவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்?

216 0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரத் தீர்மானித்துள்ளனர்.

1965ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் இஞ்சிக் குழு என ஓர் குழு அமைத்து எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டனர்.

இதேவிதமாக தற்போதைய அரசாங்கத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

சில மாதங்களாக இந்தக் குழுவிற்கான ஓர் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவின் தலைமைப் பதவிக்கு ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே, அஜித் மான்னப்பெரும மற்றும் நலின் பண்டார ஆகியோரின் பெயர்களும் இந்தக்குழுவின் தலைமைப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழு என அழைக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மாற்றுக் குழுத் தொடர்பில் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாகக் கூறப்படும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தப் பிளவு பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது