குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் பலி

250 0

கொழும்பு மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் மரணித்ததாக வெள்ளம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் இரண்டு சிறுமிகள் உட்பட்ட 6 பெண்களும் இரண்டு சிறுவர்கள் உட்பட்ட நான்கு ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, இதன்போது காயமடைந்த 12 பேரில் ஐந்து பேர் சிகிச்சைகள் பெற்று வீடுதிரும்பியுள்ளதுடன் மேலும் ஏழு பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக செல்ல வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு பார்வையிடச் செல்வதன் மூலம் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் மூலம் அருகில் உள்ள அனேகமான குடிமனைகள் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதுடன் மீட்புப் பணிகளுக்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.