மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை!

202 0

ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

ராஜபக்சர்களின் ஆட்சியில் ஊடக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டு கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கோத்தபாய ராஜபக்சவின் இரகசிய மரண படையில் செயற்பட்ட இராணுவத்தினர் இருவரை நாமல் பெரேரா அடையாளம் காட்டியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் சந்ரா லியனஆராச்சியின் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது.மருதானை ட்ரிபோலி என்ற இராணுவ முகாமில் இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட இந்த மரண படையின் சந்தேகநபரான மேஜர் ஜெனரால் உட்பட ஆறு இராணுவத்தினர் உட்பட 48 பேர் அடையாள அணிவகுப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.

அங்கு நாமல் பெரேராவினால் இரண்டாவது சந்தேக நபரான கொப்ரல் ஹேமசந்திர பெரேரா மற்றும் மூன்றாவது சந்தேக நபரான கொப்ரல் பிரபாத் துமிந்த வீரரத்ன ஆகியோரை அடையாளம் காட்டியுள்ளார்.அடையாளம் காணப்பட்ட இருவரையும் 26ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு மரண படை என்ற இராணுவ அணியை வழி நடத்திச் சென்றதாக குற்றப் புலனாய்வு பிரிவினர், நீதிமன்றில் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.