மது வருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது!

268 0

மனிதவளத்தை நாசமாக்கும் மதுவருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மதுவரிக்கட்டளைச்சட்டம், புகையிலை, மதுசாரம் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதம் 07.04.2107 இல் நடைபெற்றது.அவ்விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அபிவிருத்திக்கான வளங்களாக மனிதவளம், பௌதிகவளம், நிதிவளம், காலவளம், தகவல்வளம் போன்றவற்றைக் குறிப்பிடமுடியும். இவ்வளங்களில் மிக முக்கியமானது மனிதவளமாகும்.

மனிதவளத்தினை மேலும், மேலும் வளப்படுத்துவதன் மூலமாகவும், பலப்படுத்துவதன் மூலமாகவும் நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும்.மாறாக, மனிதவளத்தினை மதுசாரம், புகையிலை போன்ற போதைப்பொருட்களால் நாசமாக்கி விட்டு, அந்த நாசமாக்குவதன் மூலமாகக் கிடைக்கும் நிதிவளத்தினைக் கொண்டு நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்ப முடியாது.

“சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்காற்பணம்” என்று கிராமியப் பழமொழியொன்றுள்ளது. அந்த வகையில், மதுவரி, மதுவிற்பனை மூலமாகக் கிடைக்கின்ற வருவாயினை விட, அதனால் பாதிக்கப்படும் மனித வளத்தின் விரயம், தேய்மானம் மிக அதிகமாகவுள்ளன.

அதாவது மது, போதைவஸ்துப்பாவனையால் உற்பத்திக்குப் பயன்படுத்தக்கூடிய மனித வளத்தில் கணிசமானளவு நாட்டுக்குப் பயனற்றதாகவும், நாட்டுக்குச் சுமையாகவும் மாறிவிடுகின்றது.

எனவே, மனித வளத்தினை நாசமாக்கிவிட்டு அபிவிருத்தியை அடைந்து விடமுடியாது. “கண்களை விற்று விட்டு, ஓவியங்களை வாங்குவதால் பயனில்லை” அது போன்றுதான் மனிதவளத்தினை அழிக்கும் மது நிதி வருமானத்தினால் நாட்டினைக் கட்டியெழுப்ப முடியாது.

மது, போதைவஸ்துகளால் கிடைக்கும் வருமானத்தினை விட, அதனால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாகின்றவர்களைப் பரிகாரம் செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அதிகம் செலவு செய்யப்படுகின்றது என்பதை அரசாங்கம்; விளங்கிகொள்ள வேண்டும்.

போதையற்ற தேசத்தை உருவாக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கூறிக்கொள்கின்றார்.அதேவேளை நாட்டில் மதுச்சாலைகள், மதுப்பாவனைகள் அதிகரித்த வண்ணம் போகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 58 மதுவிற்பனை நிலையங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன.

இதனால் மதுப்பாவனைகள், நுகர்வுகள் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலைமை நாட்டின் எதிர்காலத்தினைச் சூனியமாக்கிவிடும் என்பதை அரசாங்கம் புரிந்தாக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மதுவிற்பனை நிலையங்கள் அதிகரித்துக் கொண்டு செல்ல, வடமாகாணத்தில் கேரளக்கஞ்சாக் கடத்தல்கள், பாவனைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அதேபோல் நாட்டின் பல பாகங்களிலும் மதுசாரம், போதைப்பொருட்கள் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் விற்பனையாகின்றன.இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்துக் கட்டுப்படுத்தாவிடின் எமது நாடு அதல விதல பாதாழத்திற்குள் சென்று விடும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

குற்றச்செயல்களான கொலை, பாலியல்பலாத்காரம், கொள்ளை, விபத்துக்கள், கோஷ்டிமோதல்கள், வதைகள் போன்ற கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதையுடன் இருப்பதாக அறியப்படுகின்றன.மனிதர்கள் சுமைகளாகவும், நடைப்பிணங்களாகவும் மாறுவதற்கும் மதுசாரம், போதைப்பொருட்கள் காரணங்களாக அமைகின்றன.

07.04.2017 இல் வீரகேசரியில் வெளியான செய்தியொன்றினையும் கவலையோடு கூறிவைக்க விரும்புகின்றேன். கதிர்காமம் புனித பிரதேசத்தில் பத்தாந்தரப் பாடசாலை மாணவர்கள் பலர் விடுமுறையினைக் குதூகலமாகக் களிப்பதற்காக பலரகமான மதுசாரங்களை அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் நான்கு மாணவர்களுக்குப் போதை தலைக்கேறியதால், மயக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்திகூறுகின்றது. “இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள் நாளைய தலைவர்கள் இன்று தலைகீழாகப் போனால் நாட்டின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் மதுசாரப்பாவனை, விற்பனையை இயலுமானவரை குறைத்து விட வேண்டும். அல்லது மது, போதைப்பொருளற்ற நாட்டினை உருவாக்க வேண்டும்.‘ஆக்கந்தரும் தொழிலாலைகளே நாட்டுக்குத்தேவை, அழிவைத்தருகின்ற மதுச்சாலைகள் மக்களுக்கு தேவையற்றவையாகும்’ முதலாளித்துவப் பொறிமுறையானது தொழிலாளர்களைச் சிந்தனையற்ற உழைக்கும் இயந்திரங்களாக மாற்றுவதற்கு மதுபாவனையை ஊக்குவிக்கதூண்டும்.

மேலும் இலட்சிய, விடுதலை வேட்கையற்றவர்களாக இளைஞர்களை மாற்றுவதற்கும் மதுசாரம், போதைப்பொருட்களைப் புழக்கத்தில் விடுவதுண்டு.இந்த நிலைமைகள் நாட்டையும் மக்களையும் குட்டிச்சுவராக்கி விடும் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.