ஹட்டன் இபோச பஸ் நிலையத்தில் சடலம்; ஒருவர் கைது

326 0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி உயிரிழந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் அலுத்கம பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) என ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது. முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்தவர் ஹட்டன் நகரில் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

குறித்த உயிரிழந்த நபர், கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் நேற்று இரவு ஹட்டன் நகரத்தில் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதாகவும், அதன் பிறகு ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.