மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது

240 0

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு நன்றி தெரிவித்து மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவியும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துதல், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருதல், மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்தல் ஆகிய விடயங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாத்திற்குள் நிறைவேற்றுமாறு கூறி மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தில் அறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதேபோல் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பான பகுதிகளை ஆராயும் போது அவர்களின் தந்திரமான தேவை என்ன என்பது தெளிவாகும்.

2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் யோசனையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை நிறைவேற்றியுள்ளதை பாராட்டியுள்ளதுடன் நிறைவேற்றப்படாதவற்றை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.கன்னத்தை தடவிக்கொண்டே கன்னத்தில் அறைந்துள்ளனர். கன்னத்தை தடவியது மாத்திரமே அரசாங்கத்திற்கு தெரிந்துள்ளது.

கன்னத்தில் அறைந்ததை பொருத்து கொண்டு, கன்னத்தை தடவினார்களே என்று அரசாங்கம் மகிழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் 2015 ஒக்டோபரில் இருந்து தமது இலக்கு நோக்கி முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பது எமக்கு தெளிவாகியுள்ளது எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.