இந்தியாவிலிருந்து இறக்குமதியான முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களிடம் கையளிப்பு

56 0

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று வியாழக்கிழமை (30) பேக்கரி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அனுமதியுடன் முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 10 இலட்சம் முட்டைகள் கெரவலப்பிட்டிய ஸ்பெட் ஆர் களஞ்சியசாலையில் வைத்து சந்தைக்கு விடுவிக்கப்பட்டது.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில்,

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நாட்டில் உள்ள அனைத்து பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அதன்படி, 10 இலட்சம் முட்டைகள் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளின் உற்பத்தித் திகதி மார்ச் மாதம் 18ஆம் திகதி எனவும் அவை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதியோடு காலாவதியாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முட்டைகளை பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கும் அதிகளவில் வழங்க முடியும்.

எதிர்வரும் நாட்களில் உள்ளூர் முட்டைகளின் விலைகளும் குறைவடையலாம். அதன்படி,  பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படும்.

நுகர்வோரை கருத்திற்கொண்டு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்ட வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.