மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

85 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை முற்றுகையிட்டு  இன்று வியாழக்கிழமை (30)  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,   கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் இடைநடுவில் வெளியேறி வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் காலை 9 மணிக்கு வாகரை பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு, வாகனேரியில் சோலர் மின்சார திட்டத்திற்கு 352 ஏக்கர் வயல் காணியை அபகரிப்பு,  மயிலத்தைமடு மேச்சல் தரை காணி அபகரிப்பு போன்ற பல்வேறு காணிகளை அபிவிருத்தி என்ற பேர்வையில் அபகரிப்பை நிறுத்த கோரி பொதுமக்கள் மாவட்ட செயலக்குக்கு முன்னால் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து ஒன்று திரண்ட பொதுமக்களுடன் பா.உறுப்பினர்  இரா.சாணக்கியன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை நோக்கி சென்ற நிலையில் அவர்களை காரியாலய பகுதிக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி வாசல் கதவை பூட்ட முற்பட்டனர்.

இதன்போது அதனை மீறி ஆர்ப்பாட்டகாரர்கள் உட் செல்ல முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட நிலையில் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையும் மீறி மாவட்ட செயலக பகுதிக்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள் நுழைந்தையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.  மாவட்ட செயலகத்துக்குள் உள் நுழையும் கோட்டை கதவை பொலிஸார் பூட்டி உட்செல்ல விடாது தடுத்து நிறுத்தியதையடுத்து, அந்த கதவின் முன்னால் ஆர்ப்பாட்டகாரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்து இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபருடன் பொலிஸார் கலந்துரையாடிய நிலையில் கூட்டத்திற்கு செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் அதிகாரிகள் மற்றும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை உட்செல்ல அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணி தொடர்பாக அரசாங்க அதிபரிடம்  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி கேட்ட நிலையில் அவர் காணி தொடர்பாக எங்களுக்கு தொடர்பில்லை அது பிரதேச செயலாகங்களிடம் கேட்குமாறு தெரிவித்ததையடுத்து அவர் பல வாத பிரதிவாதங்களின் மத்தியில் இங்கு மக்களுக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் இடை நடுவில் வெளியேறினார்.

இதேநேரம் இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு தலைவருமான சி.சந்திரகாந்தனிடம் பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் காணி அபகரிப்பு தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அபிவிருத்திகுழு தலைவர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை  அவமதித்து பேசியதுடன் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து இரா.சாணக்கியன் இடைநடுவில் அங்கிருந்து வெளியேறி வெளிநடப்பு செய்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் பகல் 11.30 மணிக்கு அங்கிருந்து விலகிச் சென்றனர்.