இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள்(காணொளி)

278 0

 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக, நுவரெலியா பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில், 355 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் அரிந்தம் பக்ஷி கலந்து கொண்டார்.

அத்துடன் இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், சரஸ்வதி சிவகுரு, சிங் பொன்னையா மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.