9 ஆண்டுகளுக்கு பின்னர் வௌிவந்த கொலைக்கான காரணம்

129 0

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2013 இல் நடந்த ஒரு கொலைக்கான அடிப்படைக் காரணத்தை வெளிப்படுத்த முடிந்தது.

இந்தக் கொலையின் பிரதான சந்தேக நபர் மாத்தறை, போர்டேகொட பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி வீரகட்டிய பிரதேசத்தில் தினசரி வட்டிக்கு பணம் வழங்கிய “ரன் மல்லி” என்றழைக்கப்படும் ரொஷான் மதுசங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலை செய்ய ஒப்பந்தத்ததை வழங்கியதாக பொலிஸாரால் நேரடியாக சந்தேகிக்கப்படும் மித்தெனியவில் உள்ள மிகப் பெரிய மொத்த விற்பனைக் கடையின் உரிமையாளர் சமன் புஷ்பகுமார என்றழைக்கப்படும் “வசனா பட்டி” தனது வியாபாரத்தையும் சொத்துக்களையும் விற்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரால் அவரைக் கைது செய்ய முடியாததால் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் காவிந்த பியசேகர தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 58 வயதுடைய “வசனா பட்டி” என்பவர் வியாபாரி போன்று மாறுவேடமிட்டு, சம்பவத்தின் பின்னர் மாத்தறை, போர்டேகொட, அரலிய மாவத்தையில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கொலையின் பின்னர் கொழும்புக்கு வந்து பழம்பொருட்களை சேகரிப்பவர் போன்று மாறுவேடமிட்டு மாத்தறைக்கு சென்று குடும்பத்தாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

விசாரணையில், நாளுக்கு நாள் வியாபார முன்னேற்றத்தால் “ரன் மல்லி” என்பவரை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கியமை தெரியவந்துள்ளது.

அதன்படி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து பழங்காலப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதனடிப்படையில் விசாரணை தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.