கடற்றொழிலாளர்கள் பிரச்சினை- தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை!

115 0

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இரண்டு மாதங்களுக்கு மேலாக கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை. அவர் தன்னுடைய கதிரையை காப்பாற்றுவதற்காக மட்டுமே தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிந்தித்து செயலாற்ற தெரியாதவர் என்றும், அவர் கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பில் அணுகி தீர்ப்பதற்கான எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நாலுபேர் சொல்வதை கேட்டே முடிவெடுக்கக் கூடியவர். சுயாதீனமாக முடிவெடுக்கத் தெரியாத ஒரு பிரதேச செயலாளர்.

மீன்பிடி நீரியல் வளத்துறை பணிப்பாளர் யாழ். மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் அதிகளவில் தேவையில்லை என்று தெரிவித்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடற்றொழிலாளர்கள் பெரிதும் மண்ணெண்ணெய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலரே அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெயை வாங்கி தொழிலில் ஈடுபடுவதாகவும், ஒருசிலர் பாய் மரத்தில் தொழிலில் ஈடுபடுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் இந்த கடற்றொழிலாளர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் என்ன, என்பது தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதியும் வந்து கூட  கடற்றொழிலாளர் சமூகத்தை சந்திக்கவில்லை” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.