இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி!

286 0

இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது கருத்துரைத்த அவர்,நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் சதிகாரர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

எனினும் ஜனநாயக ரீதியாக நாடாளுமன்றத்தினூடாக நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.இதேவேளை சைட்டம் விவகாரத்தை பூதாகரப்படுத்தி இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுகிறது.

நாட்டில் சதி முயற்சிகளை தயார்படுத்துவதற்கு ஏராளமான நிதி தேவை. அதற்கான நிதியினையும் தற்போது சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தமது ஆதரவு குழுக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வன்முறை நிலையினை தோற்றுவித்து நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை எனவும் இராணுவத்தை பலமாக்க வேண்டுமெனவும் கடும்போக்கு கருத்துகளை வெளியிட்டு சதி செய்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டம் தயார்படுத்தப்படுகிறது.

எனவே அது தொடர்பில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறான சதிமுயற்சிகளுக்கு உட்பட்டுவிடக்கூடாது.கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு புத்திசாதூரியமாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் நாட்டில் இவர்கள் வன்முறைகளைத் தூண்டிவிடுவார்கள் என்றார்.