மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

390 0

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது எனவும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று கூடி சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, சமிந்த விஜேசிறி ஊவா மாகாண சபை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரால் ஊவா மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

அவ்வாறெனின் இதனூடாக பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை தெரியப்படுத்துமாறு கோரினார்.

கேள்விகளுக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளித்துகொண்டிருந்தபோது குறிக்கிட்ட சமிந்த விஜேசிறி, பாடசாலை புத்தகப் பைகள் விவகாரத்தில் பாரிய முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் மாகாண சபையில் வினவி, பதிலளிக்குமாறும் அமைச்சரிடம் கோரிநின்றார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களால், நேரடியாக தலையிடமுடியாது எனவும், பிரதான செயலாளர் வழங்குகின்ற தரவுகளின் அடிப்படையிலேயே பதிலை வழங்கமுடியும் எனவும் கூறினார்.