இராணுவத்தினரைக் கொண்டு கஞ்சா பயிரிடுவேன்: ராஜித

235 0

இராணுவத்தினரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கஞ்சாவைப் பயிரிட உள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மருந்துக்காக பயன்படுத்தும் நோக்குடன் கஞ்சாவை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான தேசிய மருந்து வகைகள் சிலவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒன்றுதான் அபீன்.

இந்த நிலையில், கஞ்சாவை உற்பத்தி செய்யும் யோசனையை அண்மையில் தான் முன்வைத்ததாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர், மகா சங்கத்தினர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக இராணுவத்தினரின் மூலம் கஞ்சா பயிரிடும் நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கஞ்சாவை போதைப் பொருளாக பயன்படுத்தினால் தான் பிரச்சினை. மருந்தாக பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.