சிறீலங்கா-இந்திய கடற்படைத் தளபதிகள் சந்திப்பு!

266 0

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லியில் உள்ள இந்திய கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஜனவரி 29ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 2ஆம் நாள் வரை அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு சிறிலங்கா கடற்படைத் தளபதி புதுடெல்லி சென்றுள்ளார்.

நேற்று அவருக்கு புதுடெல்லியில் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதையடுத்து, இந்தியக் கடற்படைத் தளபதியைச் சந்தித்து பேச்சு நடத்தினார் சிறிலங்கா கடற்படைத் தளபதி.

இருதரப்பு கடற்படை உறவுகளையும், ஒத்துழைப்புகளையும் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

புதுடெல்லியில், தங்கியிருக்கும் போது, இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலரையும், சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இந்திய விமானப்படைத் தளபதி, இந்திய இராணுவத் தளபதி, கடலோரக் காவல்படைத் தளபதி ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதி, இந்தப் பயணத்தின் போது கோவாவில் உள்ள இந்திய கடற்படையின் போர்க் கல்லூரி, கோவா கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுக்கும் செல்லவுள்ளார்.

கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் சிறிலங்கா கடற்படையினருக்கான இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிடுவார்.

அதையடுத்து கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் பயிற்சி தலைமையகத்துக்கு சென்று, பயிற்சி வாய்ப்புகள் தொடர்பாகவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி ஆராயவுள்ளார். இதன்போது, கொச்சியில் பயிற்சி பெறும் சிறிலங்கா கடற்படையினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடுவார்.

india-lanka-navy-chiefs-2017-2india-lanka-navy-chiefs-2017-3