நீண்ட நாட்களின் பின்னர் மகிந்தவின் மேடையில் துரோகி கருணா!

237 0

உலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான விடுதலைப்புலிகளின் அமைப்பை அழித்தவர் மகிந்த ராஜபக்சவே என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் நுகேகொடையில் இன்று இடம்பெற்ற புரட்சியின் ஆரம்பம் எனும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,விடுதலைப்புலிகளை அழித்து நாட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த வெற்றி நாயகன் மகிந்த ராஜபக்சவே.

அவ்வாறான ஓர் தலைவனை இன்று கேவலப்படுத்துவது நாகரீகம் அற்ற செயலாகும். இது முற்றிலும் கண்டிக்கப்படத்தக்கது.

மகிந்தவைக் கண்டு சர்வதேசமே பயந்து வியந்து நின்றது. அதன்காரணமாக அவரது ஆட்சியை கவிழ்க்க சர்வதேசம் சதித்திட்டம் தீட்டி வெற்றி பெற்றது.

ஆனால் இன்று அது மாற்றமடைந்து விட்டது மக்கள் எழுச்சி பெற்று விட்டார்கள்.

மகிந்த வடக்கு கிழக்கிற்கு அளப்பரிய சேவைகளை செய்துள்ளார் ஆனால் அந்தத் தலைவனை இன்று தூற்றுகின்றார்கள். அவர் செய்த சேவையினை மறந்து விட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய நாளில் தலைகுனிந்து நிற்கின்றது. எதிர்க்கட்சி தலைவன் சம்பந்தனுக்கு இன்று வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் அவர் மீது பாதணிகளை கலற்றி வீசுகின்றார்கள். இத்தகைய நிலை மாற்றம் அடைய வேண்டும்.

100 நாட்கள் வேலைத்திட்டம் என்று நல்லாட்சி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.

அதேபோல் உலகத்திலே அழிக்க முடியாத புலிகளை குருகிய காலத்தில் அடித்து நொறுக்கியவர் மகிந்த ராஜபக்சவே. அவரை இன்று குற்றவாளியாக்க முனைகின்றார்கள். இராணுவத் தலைவர்களை மட்டுமல்லாது மகிந்தவையும் விசாரணை செய்கின்றார்கள்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான கேவலமான செயல் இடம்பெறுவது இல்லை. அதனால் இந்த முறைகேடான ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் மகிந்தவை நேற்று சந்தித்து இன்று சிங்களத்தில் உரையாற்றுகின்றேன் எனக் கூறினேன். ஆனால் மகிந்தவே என்னை தமிழில் உரையாற்றும் படி கேட்டுக்கொண்டார்.

வாழ்க மக்கள் தலைவன், மகிந்தவுடன் இணைந்த மக்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும். ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும், நிச்சயமாக கவிழ்க்கப்படும் எனவும் முரளிதரன் தெரிவித்தார்.