ரவிராஜ் படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு!

284 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத் தெரிவித்து அவரது மனைவியினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணையின்போது நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனை கடந்த 19 ஆம் நாள் விசாரணைக்கெடுத்துக்கொண்டபோது மனுதாரரோ, மனுதாரர் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியோ மன்றில் முன்னிலையாகவில்லையென நீதிமன்றம் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்திருந்தது.

கடந்த 19 ஆம் நாள் மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு தான் கேட்டிருக்கவில்லை என்றும் அன்றைய தினம் மனுதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை தான் அறிந்திருக்கவில்லையென்றும் எனவே நீதிமன்றத்தில் தம்மால் முன்னிலையாக முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டே சசிகலா ரவிராஜ் மீளாய்வு கோரிக்கையை விடுத்திருந்தார்.

இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான திபாலி விஜயசுந்தர, லலித் ஜெயசூரிய ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரின் மனுவை எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் மீளாய்வுக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.