செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு உதாசீனம்! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஏமாற்றம்

207 0

amnesty-international-200-newsநல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய நியாயம், உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவை கிடைப்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணியின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கையை இலங்கை அரசு மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தியது குறித்து அம்னெஸ்டி அமைப்பு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று, பல முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கி 700 பக்கங்களுக்கும் மேலான ஒரு விரிவான அறிக்கையை நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.

ஆனால், இந்த அறிக்கை கையளிப்பின் போது இலங்கை அதிபரோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை. அதே வேளையில், இந்த அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் கூறுகையில், இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்தார் என்று அம்னெஸ்டி கூறுகிறது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் இது குறித்து கூறுகையில், ”பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. சமுகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000-க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தைரியமாக தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ”இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்டனர். ஆனால், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

”தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு அரசு தனது உறுதியை காட்ட வேண்டுமெனில், அவர்கள் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும்” என்று சம்பா பட்டேல் மேலும் தெரிவித்தார்