சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! – ராஜித சேனாரத்ன

259 0

a86f81678f657ec34261292f611d3c0b_XLமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால் எல்லாம் குழப்பியடிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வுத்திட்டத்தை ஒத்த அரசியலமைப்பே தற்போது உருவாக்கப்படுகின்றதென்றும், அன்று தமது தீர்வுத்திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்றும் அண்மையில் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது சந்திரிகாவின் இக் கூற்று தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே ராஜித மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

சந்திரிகாவின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் வகையிலான யோசனையையும் பீரிஸ் முன்வைத்ததாகவும் அதற்கே ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் ராஜித மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, சமஷ்டிக்கு அப்பால் செல்லும் வகையிலான தீர்வுத் திட்டமே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டதென குறிப்பிட்ட ராஜித, அதுவும் சோவியத் ஒன்றியம் போன்று ஒற்றை ஆட்சி முறையாகவே இருந்ததென்றும் அதற்கு சர்வதேச சமூகமும் இணங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்திற்கும் சந்திரிகாவின் தீர்வுத்திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டென ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.