2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானிக்கும்போது எதிர்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படும்.
அரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.
இவ்வாறான நிலையில் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீண்டும் நாட்டின் தலைவராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், தலைவராகாமல் தம்மால் நாட்டை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பணியாற்ற வேண்டிய நிலைமையொன்று உருவானால் அதற்கு தாம் தயார் என்றும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு குறித்த அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பதை அறிவிக்க முடியும் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.