“வடக்கு – கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை என்பதை உள்ளடக்காத எவ்வாறான தீர்வையும், நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
“நாங்கள், தெளிவானதும் நேரானதுமான ஒரு பாதையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள், தேச விடுதலைக்காக போராடுகின்ற இனம். அதில் நாங்கள், போராளிகளாக இருக்கின்றோம். அந்தப் பாதையில், எங்களுடைய பாதங்களை சரியாக வைக்கின்றோம்” என்றும், அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “வடக்கு கிழக்கு என்ற மரபு வழித் தாயகம், எங்களிடம் இல்லாமல் போய்விடுமா? சுயநிர்ணய உரிமை, இறைமை எல்லாம் இல்லாமல் போய் விடுமா? என்ற பல சந்தேகங்கள், மக்களிடம் உள்ளன.
வடக்கு – கிழக்கு இணைந்த தாயக மண்ணில் சமஷ்டி மற்றும் இறைமையின் அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்கின்ற கொள்கைகளுக்காக வாக்களிக்குமாறு, கட்சி ரீதியாக, மக்களிடம் கேட்டிருந்தோம். யாருக்கும் வேலை பெற்றுத்தருவதாகவோ அல்லது உதவி செய்வதாகவோ நாங்கள் வாக்குக் கேட்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். 2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகள் இல்லாத போதும், அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்வதே, எங்களின் இலக்கு. இந்த இலக்கில் இருந்து சிறிதளவும் நாங்கள் மாறிப்போகவில்லை” என, அவர் மேலும் தெரிவித்தார்.

