நகரசபையாகும் சாய்ந்தமருது! – மக்கள் இரவிரவாகக் கொண்டாட்டம்

258 0

நகரசபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் நேற்று இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் அதனை சீர் செய்யும் முகமாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கடமைகளை மேற்கொண்டனர்.

மேலும் இங்கு கூடியுள்ள மக்கள் திரளாக கூடி பாதசாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன், வெடிகளும் கொளுத்தப்பட்டன.

கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருது நகரசபை புதிதாக உதயமாகின்றது.

இதனை, நீண்ட காலமாக மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக அவர்கள் பார்க்கின்றார்கள்.

சாய்ந்தமருது மக்களை போன்றே கல்முனையில் தனிப்பிரதேசம் கேட்கவில்லையாயினும் நிர்வாக ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படும் தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்வு நீண்ட காலப் பிரச்சினையாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.