வரலாற்று பொறுப்புக்களை நிறைவேற்ற தம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வில் அழைப்பு!

263 0

எம் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்தார்.

பாதுபாகாப்பான தேசம் – சௌபாக்கியமான நாடு ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்கும் தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனத் தலைவர்களுக்கும் எனது பெரும் மதிப்பை செலுத்துகின்றேன்.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ உரிமை உண்டு. அவர்களது சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிரயாயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமைகளையும் நாம் எப்போதும் உறுதி செய்வோம்.

எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை நாம் எப்போதும் வழங்குவோம். அது மாத்திரமல்லாது தத்தமது நண்பர்களை தெரிவுசெய்வதுபோன்று அமைதியான ஒன்றுகூடலுக்கும் உரிமையுண்டு.

இலங்கை பிரஜையொருவர் தாம் தெரிவுசெய்யும் பிரதிநிதிகளினூடாக அரசியல் செயற்பாட்டிலும், அரச நிர்வாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்போதும் பாதுகாப்போம். இவை அனைத்தும் எவராலும் சவால் விட முடியாத மனித உரிமை என்றே நாம் கருதுகின்றோம்.

ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும்போது எம்மால் சரி சமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை போன்றவை முக்கியமானது

அதிகரப் பரவலாக்கப்படும்போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புகளுக்கிடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்க வேண்டும்.

ஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டின் தகுந்த திறன் முறைக்கமைய அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின் அவர் இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாவார். அவர் தனது பதவிக்காலத்திலும் அனைத்து இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும்.

அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றும் கட்டுப்பாடுகளை உடையவர் அல்ல. ஒரு சமூகத்திற்கு சேவைபுரியும் அரசியல் தலைவர் அல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு உள்ளது.

ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த மக்களையே நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்

எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்தினரதும் நன்மைக்காவும் முன்னேற்றத்திற்காகவும் வலுவான நிறைவேற்றுத் துறைக்கும், சட்டவாக்கத்துறையும் அத்துடன் தன்னாதிக்கம் உள்ள நீதிமன்றத்துறையும் தேவைப்படுகிறது.

ஒரு நாட்டின் இருப்புக்கு இன்றியமையாத இந்த முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்தவொரு வகையிலும் மக்களின் நம்பிக்கை சீர்கெடுமானால் அது ஒரு நாட்டின் அராஜகத்துக்கு காரணமாகும்.

ஆகையினால் அனைத்து தரப்புக்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாட்டின் நலன் கருதியும் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கான தேசிய நோக்கும் கடமையும் என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டும்.

தேசியப் பாதுகாப்பை போன்று மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவவதிலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துவோம். ஆகையினால் பயங்கரவாதத்திற்கு வித்திடும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்த நாட்டில் செயற்படுவதற்கு நாம் இடமளமிக்க மாட்டோம்.

அது மாத்திரமல்லாது நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறுகளிலிருந்து பிள்ளைகளை மீட்க்கும் வரை பெற்றோருக்கு சுதந்திரம் இல்லை. அரச நிறுவனங்களுக்குள் ஊழல்கள் மோசடிகள் இருக்கும் வரை பொது மக்களுக்கு சுதந்திரம் இல்லை. ஆகையினால் இயல்பான மக்களின் வாழ்க்கைக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நடவடிக்கைகளை வினைத்திறன் ஆக்குவதற்கு தேவையான சீர்த்திருத்தங்களை தற்போது பாதுகாப்புத் துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.

சிந்திக்கும் சுதந்திரத்தையும், எழுதுவதற்கான சுதந்திரத்தையும் நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன். அப்போது தான் தத்துவ ஞானிகளை போன்று உயர் மட்ட ஆக்கங்களும் உருவாகும். உங்கள் மன சாட்சியுடன் செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்

எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள், ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள், அரசியல் தேவைகளைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது, உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும நாட்டுக்கு தீன்மை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பது பற்றி சிந்தித்து செயற்படுங்கள்.

வரலாற்றினால் எம் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலத்துக்காக பிரார்த்தனை செய்கின்றேன்