ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியாதவரை எமக்கு எதிரான சதித்திட்டங்கள் தொடர்ந்து இடம்பெற வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராகவேண்டும். அதன் ஓர் அங்கமே சுவிட்சர்லாந்து தூதரக பணிப்பெண் கடத்தல் குற்றச்சாட்டு என லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ேசாசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிவந்த பெண்ணை கடத்திச்சென்று துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுவந்த செய்தி முற்றாக பொய்யான சம்பவம் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்படுவதாக சர்வதேசத்துக்கு காட்டுவதற்கான முயற்சியாகவே இது அமைந்துள்ளது. சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண் சிறுபான்மை இனத்தவராவார்.
கடந்த காலங்களில் நாட்டை சூறையாடிவந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு தேவையான முறையில் கடந்த காலங்களில் செயற்பட்டுவந்தவர்கள் தொடர்ந்தும் அவர்களின் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களின் சதித்திட்டம் இன்னும் முடிவடையவில்லை. இவ்வாறான சம்பவங்களை உருவாக்கி எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் எமக்கெதிராக நடவடிக்கை எடுக்கவே திட்டமிடுகின்றனர்.
அத்துடன் மார்ச் மாதம் இடம்பெற இருக்கும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் அனுசரணையுடன் 2015இல் அமெரிக்கா கொண்டுவந்த பொறுப்புக்கூறல் தொடர்பான பிரேரணையை மீண்டும் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. என்றாலும் எந்தளவுக்கு அது ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்க முடியாது.
அதனால் ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் ஏகாதிபத்திய வாதிகளுக்கு தேவையான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. அதனால் எமக்கெதிரான பொய் குற்றச்சாட்டுக்களை உருவாக்கி சிங்கள பெரும்பான்மை மக்கள் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்படுவதாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் இவ்வாறான சதித்திட்டங்கள் பல்வேறு கோணத்தில் வரலாம். அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக வேண்டும். இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.