‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

305 0

unnamed-3யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.