எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு

249 0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனுவை ஏற்றே நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்ற நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேற்படி தேர்தல் குறித்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே இத்தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக நடைபெற்ற சில விடயங்களைச் சுட்டிக் காட்டி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான தீர்ப்பொன்றை வழங்கும் வரையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த மேல் நீதிமன்றம் தடையுத்தரவு விதித்திருந்தது.

இந்நிலையில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனுவை ஏற்று எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.