வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வை வழங்கத் தயார் -சஜித்

209 0

வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வை வழங்கத் தயார் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சீதாவக்க, சுதுவெல்ல பிரதேசத்தில் முனமலேகம எழுச்சிக் கிராமத்தை திறந்து வைத்ததன் பின்னர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 70 சதவீதமானவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை ஒன்றுள்ளது. அது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிக்கையில், தனிநபர் வருமானமும் குடும்ப வருமானமும் அதிகரிக்கக்கூடிய முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுயதொழில் முயற்சிக்கான புரட்சியைத் தொடங்க வேண்டும். அதிகாரத்திற்கு வர எத்தணிக்கும் பலர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தீர்வொன்றும் கிடையாது. தீர்வை வழங்கக்கூடிய பொருளாதார அறிவு இல்லை என்றும் மக்களின் துயரங்களை அறியக்கூடிய தன்மை கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், தமது குடும்பத்தின் துயர் அறியும் தன்மை அவர்களுக்கு இருக்கிறது. ஆட்சியாளர்கள் மக்களின் துயர் அறியக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய ஆட்சியாளரால் யாருக்கும் நன்மை கிடையாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.