ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையுடன் வினவிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினக் கட்சித் தலைவர் ஒருவருடன் நேற்றுத் தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தெரிவு விடயத்தில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி தற்போதைய நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சிறுபான்மையின அமைச்சர் ஒருவருடன் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான இணக்கப்பாடு எவையும் ஏற்படவில்லை என்றும் அவ்வாறு வெளியான செய்தி தவறானது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.